தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே வெயில் கொளுத்தி வருகிறது. வெயில் அதிகமாக இருப்பதன் காரணமாக மக்கள் அனைவரும் வெளியே செல்லவே அச்சப்படுகிறார்கள். இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும், வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மித்தனமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.