டீசல் வாகனங்களுக்கு தடை…2027-க்கு பிறகு இந்த வாகனங்கள் தான்!!

டீசலில் இயங்கும் வாகனங்களை 2027ஆம் ஆண்டுக்குள் தடை செய்ய இந்திய அரசாங்கத்திற்கு எண்ணெய் அமைச்சகக் குழு பரிந்துரை.

இந்தியாவில் மாசுபட்ட நகரங்களில் மாசு உமிழ்வைக் குறைக்க, டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களை 2027ஆம் ஆண்டுக்குள் தடை செய்ய அரசுக்கு எண்ணெய் அமைச்சகக்குழு பரிந்துரை செய்துள்ளது. இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழு, டீசல் வாகனங்களைத் தடைசெய்து மின்சார மற்றும் எரிவாயு எரிபொருள் வாகனங்களுக்கு மாற வேண்டும் என்று அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

2030க்குள், மின்சாரம் இல்லாத நகரப் பேருந்துகள் எதுவும் இயக்கப்படக்கூடாது, 2024 முதல் நகரப் போக்குவரத்திற்கான டீசல் பேருந்துகள் இயக்கப்படக்கூடாது என்று எண்ணெய் அமைச்சகத்தின் குழு அறிக்கையில் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய சாலைகளில் எலக்ட்ரிக் வாகனங்களை பெருக்குவதற்காக, மின்சாரம் மற்றும் கலப்பின வாகனங்களின் விரைவான மாற்றத்திற்கு FAME திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகைகளை, மார்ச் 31 க்கு அப்பாலும் நீடிக்க அரசிற்கு குழு அறிவுறுத்தியுள்ளது.

மின்சார மற்றும் கலப்பின(எரிபொருள் மற்றும் கேஸ்) வாகனங்களை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2015இல் தேசிய எலக்ட்ரிக் மொபிலிட்டி மிஷனின் கீழ் நிதி உதவியை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. இந்தியாவில் போக்குவரத்துத் துறைகளில் டீசல் இன்னும் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.

2024 முதல் சரக்கு போக்குவரத்திற்காக ரயில்வே மற்றும் எரிவாயு(கேஸ்) மூலம் இயங்கும் லாரிகளை அதிக அளவில் பயன்படுத்த குழு பரிந்துரைத்தது. இந்தியாவில் நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள் மின்சாரத்தால் இயக்கப்பட வேண்டும், எரிவாயுவை 10-15 ஆண்டுகளுக்கு மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்றும் அந்த குழு கூறியது.

author avatar
Muthu Kumar