#Breaking: “ஆல் பாஸ் என அரசு அறிவித்ததை ஏற்க இயலாது”- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

அரியர் தேர்வு ரத்து செய்து “ஆல் பாஸ்” என அறிவித்து, பிறப்பித்த அரசின் உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. தற்பொழுது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து பட்டப் படிப்புக்களுக்கு இறுதிப் பருவத்தேர்வு தவிர, மற்ற பருவ தேர்வுகள் ரத்து செய்வதாகவும், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு பல தரப்பில் ஆஹாராவும், சில தரப்பில் எதிர்ப்புகளும் கிளம்பியது.

இதனை எதிர்த்து கடந்த அக்டோபர் மாதம் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்பட 2 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அரியர் தேர்வு ரத்து செய்து “ஆல் பாஸ்” என அறிவித்து, பிறப்பித்த அரசின் உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், கல்வி புனிதத்தில் சமரசம் செய்து கொள்ளாமல், தேர்வு நடத்துவதில் யூ.ஜி.சி., தமிழக அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.