பிளாஸ்மாவை தானம் செய்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 5,000 – கர்நாடக அரசு.!

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மாவை தானம் செய்தால், அவர்களுக்கு ரூ. 5,000 நன்கொடையாக வழங்கப்படும் என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த மருத்துவர்களும், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா தொற்றை குணப்படுத்த மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

ஆனால் பிளாஸ்மா சிகிச்சை என்ற முறை கொரோனாவை கட்டுப்படுத்தி நல்ல பலனை தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதன் பின்னர் சிகிச்சை பெற்று குணமடைந்தவரின் உடம்பில் இயல்பாக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். மேலும், ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவிலும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள”ஆன்டிபாடி”எனும் நோய் எதிர்ப்பு சக்தியை பிரித்து எடுத்து கொரோனா பாதித்த நபருக்கு செலுத்தினால், கொரோனாவை குணப்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது.

பிளாஸ்மா தெராபி என்று அழைக்கப்படும் இந்த முறை கொரோனா பாதிப்பு அதிகமுள்ள டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் ஊக்கப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கர்நாடக மாநில சுகாதார துறை அமைச்சரான சுதாகர், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் தங்களின் பிளாஸ்மாவை தானம் செய்ய கோரியும், அவ்வாறு நன்கொடை அளிப்பவர்களுக்கு ரூ. 5000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.