Andhra Pradesh CM Chandrababu Naidu

31 மாதங்கள் கழித்து ரீ-என்ட்ரி.! சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு நாயுடு.!

By

ஆந்திர பிரதேசம்: கடந்த 2021, நவம்பர் 19ஆம் தேதி ஆந்திர மாநில சட்டசபையில் ஓர் விவாதத்தின் போது. ஆளுங்கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சிலர், எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடவின் குடும்பத்தினரை பற்றி தவறாக கூறியதாக கருத்துக்கள் எழுந்தன. இதனை அடுத்து கண்ணீருடன் அப்போது சட்டசபையில் இருந்து வெளியேறினார் சந்திரபாபு நாயுடு.

சந்திரபாபு நாயுடு சட்டசபையில் இருந்து வெளியேறும் போது, இனிமேல் இந்த சட்டசபையில் நான் கலந்து கொள்ள மாட்டேன். அவ்வாறு நான் கலந்து கொண்டால், ஆந்திர மாநில  முதலமைச்சராக மாறிய பிறகு தான் சட்டசபைக்கு வருவேன் என்று சபதம் மேற்கொண்டார்.

இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 175 இடங்களில் 135 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி. மேலும், அதன் கூட்டணி கட்சிகளான ஜனசேனா 21 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் பெற்றன. YSR காங்கிரஸ் 11 இடங்களை மட்டுமே வென்று படுதோல்வி அடைந்தது.

கடந்த 2019 தேர்தலில் வெறும் 23 இடங்களை மட்டுமே வென்று இருந்த தெலுங்கு தேசம் கட்சி, தற்போது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து நான்காவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் சந்திரபாபு நாயுடு. மேலும், 3வது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க முக்கிய பங்காற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியான சூழலில், 31 மாதங்களுக்கு பிறகு ஆந்திர மாநில சட்டமன்றத்திற்குள் இன்று நுழைந்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்த வரவேற்பு அளித்தனர். இன்று ஆந்திர மாநில சட்டமன்றத்தில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் எம்எல்ஏவாக பதவி ஏற்று கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

Dinasuvadu Media @2023