Monday, June 3, 2024

ADMK Case : அதிமுக கொடி, சின்னம் குறித்த வழக்கு.. ஓபிஎஸ் தரப்பு பதில் கூற உயர்நீதிமன்றம் உத்தரவு.!

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி – முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டு, அப்போது அதிமுக இரு அணிகளாக பிரிந்தன. கடந்த வருடம் ஜூலை மாத பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பிறகு அண்மையில் உள்கட்சி தேர்தல் மூலம் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிச்சாமி.

இபிஎஸ் இடைக்கால பொதுசெயலாளராக அறிவிக்கப்படும் போதே ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் நடைபெற்று வந்தன.

மேற்குறிப்பிட்ட பெரும்பாலான வழக்குகளில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்புகள் வெளியாகி இருந்தன. மேலும் தேர்தல் ஆணையம் கூட அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்தது.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளராக முன்னர் அறிவிக்கப்பட்டு பின்னர் அக்கட்சியில் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவர் அதிமுக கொடி, சின்னம், அதிமுக பெயர் அடங்கிய லெட்டர் பேடு ஆகியவற்றை தொடர்ந்து தற்போது வரை பயன்படுத்தி வருகிறார். இதனை குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் அதிமுகவின் சின்னத்தை பயன்படுத்துவது  சட்டத்திற்கு முரணானது. தேர்தல் நெருங்கும் வேளையில் இம்மாதிரியான செயல் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. என்னை அதிமுக பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. இந்த சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம், கட்சி சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.  இதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த வழக்கானது இன்று நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரிடம் நீதிபதி விளக்கம் கேட்டார். அவர்கள், குறுகிய காலம் அவகாசம் கோரினர். அவர்கள் கோரிக்கையை ஏற்று வரும் அக்டோபர் 6ஆம் தேதிக்குள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தங்கள் தரப்பு விளக்கத்தை நீதிமன்றத்தில் கூற வேண்டும் என கூறி வழக்கை வரும் அக்டோபர் 6ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா ஒத்திவைத்தார்.

RELATED ARTICLES