சமீபத்தில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ ஹிந்தி படத்தின் ட்ரைலருக்கு கேரளா முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தி கேரளா ஸ்டோரி என்ற ஹிந்திப் படம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த ஆண்டு போஸ்டர் வெளியிடப்பட்டபோதே, கேரள அரசால் விமர்சிக்கப்பட்ட இப்படம், அதன் டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் கதை சுதிப்தோ சென் என்பவரால் எழுதப்பட்டு இயக்கப்பட்டது. தென் மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் சுமார் 32,000 பெண்களின் பின்னணியில் உள்ள சம்பவங்களை இப்படம் விளக்குவதாக கூறப்படுகிறது.
தற்போது, கேரள முதல்வர் பினராயி விஜயன் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த ட்ரைலர் மதச்சார்பின்மையை கொண்ட கேரளாவில் திட்டமிட்டு பிரிவினையை தூண்டும் விதமாக அமைந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ‘சங்க பரிவாரின் கொள்கையை பரப்புரை செய்வதற்காக எடுக்கப்பட்ட படம்தான் இது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு, இந்தப் படத்திற்கு காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கேரளாவிலும் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது போலீஸ் புகார் பதிவு செய்யப்பட்டது. அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ள இப்படம் மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.