அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு? – வெளியான முக்கிய தகவல்!

அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு,பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால்,இரட்டை தலைமை விவகாரம் சர்ச்சையில் உள்ள நிலையில்,அடுத்த நிலையில் இருக்கும் பொருளாளருக்கு தான் சின்னமும்,கட்சியை வழி நடத்தும் அதிகாரமும் உள்ளது என்றும், பொருளாளரான ஓபிஎஸ் அவர்களின் ஒப்புதலின்றி பொதுக்குழுவை கூட்டினால் அது செல்லாது என்றும்,குறிப்பாக, அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செய்தாலும் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சரும்,ஈபிஎஸ் ஆதரவாளருமான நத்தம் விஸ்வநாதன் கூறுகையில்:”அதிமுக பொதுக்குழு சட்டப்படி,சட்டவிதிகளுக்குட்பட்டு நடைபெறும்,இதை யாராலும் தடுக்க முடியாது.அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி அவர்களை நியமனம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்படும். குறிப்பாக, புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,புரட்சி தலைவி அம்மா காலத்தில் பொதுச்செயலாளர் பதவியில் என்னென்ன அதிகாரங்கள் இருந்ததோ,அந்த அத்தனை அதிகாரங்களையும் உள்ளடக்கிய பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு,அந்த பதவியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை நியமனம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்படும்”,என்று கூறினார்.

இந்நிலையில்,அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும்,ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளார் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும்,அதே சமயம்,அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே,கடந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்,அந்த உத்தரவை மீறி பொதுக்குழு தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டது நீதிமன்ற அவமதிப்பு என ஓபிஎஸ் ஆதரவாளரும் பொதுக்குழு உறுப்பினருமான சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும்,அதிமுகவில் தமிழ் மகன் உசேனை அவைத்தலைவராக நியமித்தது செல்லாது என அறிவிக்க கோரியும்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சண்முகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்த முறையீட்டில் கோரிக்கை வைக்க முடியாது எனவும்,அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தனி நீதிபதியைத்தான் அணுக வேண்டும் எனவும் கூறி நேற்று நடைபெற்ற வழக்கை ஜூலை 7 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment