பீகாரில் 3 பெண்களை சூனியக்காரி என கூறி சிறுநீர் குடிக்க வைத்த அவலம்..!

பீகாரில் சூனியக்காரி என்று மூன்று பெண்களை கூறி இரவு முழுவதும் கட்டி வைத்து துன்புறுத்தி, சிறுநீர் கழிவுகளை குடிக்க வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பீகாரில் உள்ள பர்ணியா மாவட்டத்தில் இருக்கும் மக்களில் சிலர், 3 பெண்களை சூனியக்காரிகள் என்று குற்றம் சாட்டி அவர்களை கயிற்றால் வீட்டில் கட்டி வைத்து துன்புறுத்தியுள்ளனர். மேலும், அவர்களிடம் மனித கழிவுகளை உட்கொள்ள வைத்துள்ளனர். இந்த மூன்று பெண்களில் ஒருவர் சிறுபான்மை இனத்தவர். இந்த சம்பவத்தில் சிக்கிய பெண்களில் ஒருவரது உறவினர் சகோதரரின் மனைவியை மற்ற இரு பெண்கள் சேர்ந்து காண வந்துள்ளனர்.

அந்த பெண்ணுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர்களை சந்திக்க வந்துள்ளனர். அப்போது அங்கிருக்கும் மக்கள் இவர்களை காட்டி இவர்கள் சூனியக்காரிகள் என்று கூறியுள்ளனர். மேலும், 10 முதல் 12 பேர் சேர்ந்து மூவரையும் வீட்டில் கட்டி அடைத்து வைத்துள்ளனர். பின்னர், இவர்கள் மூவரையும் இரவு முழுவதும் தாக்கி, மனித கழிவுகளையும், சிறுநீரையும் குடிக்க வைத்ததாக அந்த பெண்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் சனிக்கிழமையன்று நிகழ்ந்துள்ளது. ஆனால், இவர்கள் 3 பேரும் திங்கள்கிழமையன்று சம்பவம் நிகழ்ந்த மோஹினி ஆதிவாசி டோலா பகுதிக்கு உட்பட்ட கஸ்பா காவல் நிலையத்தில் எழுத்து பூர்வமாக புகார் அளித்துள்ளனர்.

இதனை அறிந்த காவல்துறை அதிகாரி சாந்தன் குமார் தாக்கூர் 11 நபர்கள் மீது சூனிய எதிர்ப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். இதில் இதுவரை 2 பேர் கைதான நிலையில் மற்றவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களை சூனியக்காரிகள் என்று தாக்கும் நிகழ்வு பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெறுகிறது. இதன் காரணமாகவே சூனிய எதிர்ப்பு சட்டம் மற்றும் அபராதம் போன்றவை விதிக்கப்பட்டுள்ளது.