ருவாண்டாவில் கனமழை… வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 130 பேர் உயிரிழப்பு.!

ருவாண்டாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் இரவு முழுவதும் கனமழை பெய்து வந்ததால், வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 130 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலர் உறங்கிக் கொண்டிருந்த இரவில் மழை பெய்ததுதான் உயிரிழப்புக்கு காரணம் என்று அதிகாரி கூறினார்.

பல வீடுகள் மக்கள் மீது இடிந்து விழுந்ததாகவும், மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளது. வெள்ள நீர் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ருவாண்டாவின் ஜனாதிபதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆறுதல் தெரிவித்தார், மேலும் அதிக ஆபத்துள்ள பகுதிகளிலிருந்து மக்களை வேறு பகுதிக்கு மாற்றப்படுவதாகவும் அவர் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்களை வழங்குவது உட்பட நிவாரண முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக அவசரகால அமைச்சர் மேரி சோலங்கே கெய்சிரே கூறியுள்ளார்.

மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் கடுமையான மழை மற்றும் அதன் விளைவாக சேதம் ஏற்படுவது ருவாண்டாவில் பொதுவானவை, ஆனால் மே 2020க்குப் பிறகு இதுவே மிக மோசமான வெள்ளமாகக் கூறப்படுகிறது.

author avatar
Muthu Kumar