தொடரும் ஆணவக் கொலை.. காதல் திருமணம் செய்த அக்காவை கொலை செய்த தம்பி!

கர்நாடகா மாநிலம், கரடகியில் வசித்து வந்த வினோத் – திரிவேணி காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களை திரிவேணியின் தம்பி உட்பட சிலர், கொலை செய்தனர்.

கர்நாடகா மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத். இவர் கொப்பல் மாவட்டத்தில் கரடகி எனும் இடத்தில் உள்ள வங்கியில் பணியாற்றி வந்தார். இவருக்கும், பாகல்கோட்டையை சேர்ந்த திரிவேணி எனும் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களின் காதல் நாளடைவில் இரும்பு போல வலுவாக இருந்தது.

இந்தக் காதல் திரிவேணியின் வீட்டிற்கு தெரியவர, அவரின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளையும் மீறி திரிவேணி வீட்டை விட்டு வெளியேறி, வினோத்தை கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.இதனையடுத்து வினோத் – திரிவேணி தம்பதியினர், கரடகியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில், கடந்த 17 ஆம் தேதி வினோத் – திரிவேணி இருவரும் தங்களின் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்கள். அப்பொழுது அவர்களை வழிமறைத்த சிலர், இரும்புக்கம்பியால் சரமாரியாக தாக்கி, அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த திரிவேணி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, வினோத் உயிருக்கு போராடி வந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கரடகி போலீசார், பலத்த காயமடைந்த வினோத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினார்கள். மேலும், திரிவேணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்பொழுது திரிவேணி, வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதால் அவரையும், அவரின் கணவர் வினோத்தையும் திரிவேணியின் தம்பி அவினாஷ் உள்ளிட்ட சிலர் இரும்பு கம்பியால் தாக்கியது போலீசாருக்கு தெரியவந்தது. அதனைதொடர்ந்து அவினாஷை போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோத், சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழக்க, தலைமறைவான சிலரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவம், கரடகியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.