என்ன நடந்தாலும் நாங்கள் தினகரனை விட்டு போகமாட்டோம்! எம்.எல்.ஏ.க்கள் உறுதி

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்,3-வது நீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும். தொடர்ந்து தினகரன் அணியில் நீடிப்போம் என்று  தெரிவித்தனர்.

18 எம்.எல்.ஏ.க் களின் தகுதி நீக்க வழக்கில் ‘சபாநாயகரின் அதி காரத்தில் தலையிட முடியாது’ என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு அளித்தார்.

அதே அமர்வில் இருந்த நீதிபதி சுந்தர், தகுதி நீக்கம் செய்ததில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாததால் சபாநாயகரின் உத்தரவு செல்லாது. இந்த விவகாரத்தில் நான் தலைமை நீதிபதி கருத்தில் இருந்து மாறுபடுகிறேன் என்றார். இந்த வழக்கில் எந்த முடிவும் எட்டப்படாததால் மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்படுகிறது எனத் தீர்ப்பு வெளியானது.

இந்த தீர்ப்பு குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், விருதுநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளருமான சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:-

18 எம்.எல்.ஏக்களும் தினகரன் தலைமையில் ஒற்றுமையுடன்தான் இருக்கின்றோம். சபாநாயகர் உத்தரவு செல்லும் எனத் தீர்ப்பு வந்தாலும் நாங்கள் தினகரன் தலைமையில் தான் தொடர்ந்து இயங்குவோம்.

 

மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகதான் அமையும். தினகரன் தமிழகத்தின் முதல் வராவதை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பரமக்குடி தொகுதி டாக்டர் முத்தையா கூறுகையில், இந்த தீர்ப்பானது தொகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். 3-வது நீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும். டி.டி.வி. தினகரன் கரத்தை வலுப்படுத்தும் வகையில் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம் என்றார்.

மானாமதுரை மாரியப்பன் கென்னடி கூறியதாவது:-

நீதிமன்ற தீர்ப்பை மிகவும் எதிர்பார்த்தோம். நீதி மன்றம் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தோம். ஆனால் நேர்மாறாக தீர்ப்பு உள்ளது. 9 மாதங்களாக எம்.எல்.ஏ. பணியை மேற்கொள்ள முடியவில்லை. தொகுதி மக்கள் என்னிடம் குறைகளை நேரிலும், போனிலும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொகுதி முழுவதும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. தகுதி நீக்கம் என்ற ஒரே காரணத்திற்காக எனது தொகுதியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சர்களும் எந்த வித பணியையும் செய்வதில்லை.

தகுதி நீக்கம் செய்வதற்கு முன்பு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று செய்யப்பட வேண்டிய திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தற்போது தீர்ப்பு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை. தீர்ப்பு நியாயமாக கிடைக்கும் என்று நம்புகிறோம். தொடர்ந்து தினகரன் அணியில் நீடிப்பேன் என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment