இரட்டை வேடம் போடும் பாஜகவை அம்பலப்படுத்துவோம் – அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன்

பாஜகவின் இரட்டை வேடத்தை அதிமுகவின் ஐ.டி.அணி சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்த வேண்டும் என்று பொன்னையன் வலியுறுத்தல்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக பேரவை நிர்வாகிகளுக்கு செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் பயிற்சியின் 2ம் நாளான நேற்று கலந்துகொண்டு பேசிய அதிமுக அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் மூத்த நிர்வாகியுமான பொன்னையன், அதிமுகவின் இடத்தை பாஜக நிரப்புகிறது. பாஜக, அதிமுகவின் கூட்டணி கட்சி தான் என்றாலும் கூட அக்கட்சி தமிழகத்தில் வளர்வது என்பது அதிமுகவுக்கும், திராவிட கொள்கைகளுக்கும், தமிழக நலனுக்கும் நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர், முல்லைப் பெரியாறு, பாலாறு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. தமிழக உரிமைகளுக்கு எதிராக பாஜக தொடர்ந்து செயல்படுகிறது. காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் கர்நாடக பாஜகவை தமிழக பாஜக கண்டிக்காமல் மௌனம் காக்கிறது. இதனால் பாஜக தான் எதிர்க்கட்சி என்ற சமூக வலைதள பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் இரட்டை வேடம் போடும் பாஜகவை அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் சமூக ஊடகங்களில் அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சட்டமன்றம், உள்ளாட்சி உள்ளிட்ட தொடர் தோல்விகளை அடுத்து ஆளும் திமுக அரசுக்கு எதிராக மௌனம் காத்து வருகிறது அதிமுக. அதிமுகவை அழித்து ஒழித்துவிட்டு தமிழ்நாட்டில் பாஜக வளர நினைக்கிறது என்று குற்றம் சாட்டிய பொன்னையன், அதிமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், அதிமுக பின்னுக்கு தள்ளப்படும் என்ற பிரச்சாரத்தை பாஜக மறைமுகமாக செய்து வருவதாகவும், அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Comment