சுரங்க மீட்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு தலா ரூ.50,000 – உத்தரகண்ட் முதலமைச்சர் அறிவிப்பு

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கப்பாதை பணி நடைபெற்று வந்தபோது கடந்த 12-ஆம் தேதி திடீரென சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுரங்க பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மீட்புப் பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர், எலி வளை தொழிலாளர்கள் ஈடுபட்டனர். மீட்பு பணியில் நொடிக்கு நொடி சவால் மற்றும் இயந்திரம் கோளாறு என பல தடைகளை தாண்டி 17 நாட்கள் போராட்டத்துக்கு 41 தொழிலாளர்களும் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கபட்ட தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்காக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

41 தொழிலாளர்களும் நீண்ட போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டதற்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர். தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் பாறை மற்றும் மண் சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு, ஆக்சிஜன் கிடைக்க உதவியது.

41 உயிர்களை காத்த `எலி வளை’.. உலகமே திரும்பி பார்க்க வைத்த தமிழக நிறுவனம்!

இந்த நிலையில், சுரங்க விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களை சின்யாலிசூர் மருத்துவமனைக்கு சென்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று சந்தித்தார். அப்போது, மாநில அரசின் மூத்த அதிகாரிகள் வருகையின் போது உடன் வந்த முதல்வர் தாமி, ஒவ்வொரு தொழிலாளியுடனும் கலந்துரையாடி அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இதன்பின் பேசிய அவர், மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் நலமுடனும் மகிழ்வுடனும் உள்ளனர்.

அடுத்தகட்ட மருத்துவ பரிசோதனையும் செய்யப்படவுள்ளது. மீட்கப்பட்ட ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். பௌக்நாக் கோவில் மீண்டும் கட்டப்படும். கட்டுமானத்தில் உள்ள சுரங்கப்பாதைகள் மறுஆய்வு செய்யப்படும் என தெரிவித்த அவர், சுரங்க மீட்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் அனைவருக்கும் தலா ரூ.50,000  வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

மேலும் கூறுகையில், மீட்பு பணி மிகவும் சவாலானது, அதில் பணிபுரியும் அனைத்து மக்களும் பங்களித்துள்ளனர். அனைவருக்கும், குறிப்பாக நமது பிரதமருக்கு நான் நன்றி கூறுகிறேன். ஒரு நாள் கூட, மீட்புப் பணி குறித்த எந்த தகவலையும் பிரதமர் தவறவிடவில்லை. அவரது தொடர்ச்சியான வழிகாட்டுதலின் காரணமாக, இந்த கடினமான போராட்டத்தை நாங்கள் வெற்றிகரமாக செய்தோம் என கூறினார்.