குழந்தை வரம் தரும் தாயுமானசுவாமி..!!தாயாக மாறி மலைக்கோட்டையில் மருத்துவம் பார்க்கும் ஐதீக நிகழ்ச்சி..!!

By

தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இது ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான், அவளுடைய தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம் ஆகையால், இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமான சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

திருவிழாவின் 5-ம் நாளான நேற்று காலை நூற்றுக்கால் மண்டபத்தில், சிவ பக்தியில் சிறந்த செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு சிவபெருமான் அவளுடைய தாய் வடிவில் (தாயுமானவராய்) வந்து மருத்துவம் செய்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் குழந்தையை தொட்டிலில் போட்டு தாலாட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.

மாலையில் அறுபத்து மூவர் முதலான பக்தகோடிகள் சூழ ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி ரத்தினாவதி அம்மையாருக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இரவில் சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் செட்டிப்பெண்ணுக்கு தாயுமானசுவாமி மருத்துவம் பார்க்கும் நிகழ்ச்சியில், திருமணம் ஆகி குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் கலந்து கொண்டு, அங்கு வழங்கப் படும் மருந்தை பிரசாதமாக பெற்று முறையாக சாப்பிட்டால், அந்த தம்பதிகளுக்கு ஒரு வருடத்திற்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Dinasuvadu Media @2023