தமிழக பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றமே – எடப்பாடி பழனிசாமி விமர்சனம் ..!

அதிமுக வெளிநடப்பு:

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கியதும் அதிமுக உறுப்பினர்கள் பேச அனுமதி கோரி அமளியில் ஈடுபட்டனர். பேச தங்களுக்கு அனுமதி வழங்காததால் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

திமுக தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்படவில்லை:

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றமே. மக்களை ஏமாற்றும் வெத்துவேட்டு அறிக்கையாக பட்ஜெட் உள்ளது. கல்விக்கடன் தள்ளுபடி குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. மகளிருக்கு உரிமைத்தொகையும் தள்ளிபோடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மூலதன செலவுகளுக்காகவே நிதி செலவளிக்கப்பட்டது.

திமுக தேர்தல் அறிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கொரோனா காலத்தில் அரசுக்கு வருவாயே கிடைக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த உடன் வருவாய் வழிகள் இயல்பு நிலைக்கு திரும்பின. வருவாய் அதிகரித்துள்ள நிலையில், கடன் குறைந்திருக்க வேண்டும், ஆனால் குறையவில்லை, அரசு சரியாக செயல்படவில்லை. தமிழ் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது.

1.08 லட்சம் கோடி கடன்:

வருவாய் அதிகரித்தும்  தமிழ்நாடு பட்ஜெட்டில் எதிர்பார்த்த புதிய திட்டங்கள் இல்லை. மக்கள் நலனில் அக்கறை கொண்ட யாரும் இந்த பட்ஜெட்டை ஏற்கமாட்டார்கள். ரகுராம் ராஜன் குழு என்ன சொல்கிறது என நிதிநிலை அறிக்கையில் இல்லை. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் நீட் விலக்கு கையெழுத்துப் போடுவேன் என்ற வாக்குறுதி என்னவானது..?  திமுக ஆட்சிக்கு பின் 2021-2022-ல் 1.08 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் முக்கிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என கூறினார்.