திமுகவை கற்பனையில் கூட யாராலும் அழிக்கமுடியாது! பாஜகவும், அதிமுகவும் ஒன்றுதான் – முதல்வர்

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு – நம் இலக்கு என்ற தலைப்பில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தில் கையெழுத்திட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் சென்னையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றனார்.

முதல்வர் பேசியதாவது, சமூக வலைதளங்கள் மூலம் மக்களின் கருத்துகளை உடனடியாக தெரிந்துகொள்ள வேண்டும். எதிர்மறை பிரச்சாரம் மூலம் எதிரியை வீழ்த்துவதைவிட, நேர்மறை பிரச்சாரம் மூலம் நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம், சாதி, மதங்களின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த நினைக்கும் கட்சியுடன் நாம் மோதி வருகிறோம்.

அரசியல்வாதிகள் மட்டுமல்ல அனைவரின் மீதும் அதிகார அத்துமீறல் செய்பவர்கள் பாஜகவினர். கொள்கையற்ற கூட்டம் தான் அதிமுக. பாஜகவும், அதிமுகவும் வேறு வேறு அல்ல, நாணயமில்லாத நாணயத்தின் இருபக்கங்கள் தான். பாஜக போன்ற சோஷியல் வைரஸை தான் நாம் எதிர்த்து நிற்கிறோம்.  பாஜகவுக்கு தெரிந்தது எல்லாம் வாட்ஸ் அப் பல்கலைக்கழகம் தான். வாட்ஸ் அப் பல்கலைக்கழகம் மூலம் பரப்பும் வதந்திகளை நம்புவதற்கு ஒரு கூட்டமே உள்ளது. திமுக எப்போதும் ஆரிய ஆதிக்கத்திற்குத்தான் எதிரியே தவிர ஆன்மிகத்துக்கு அல்ல.

என் மனைவி எந்த கோயிலுக்கு செல்கிறார் என்பதை பார்ப்பதே  பாஜகவினரின் வேலை. கோயிலும், பக்தியும் அவரவர் உரிமை. எனது மனைவி துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு செல்வது அவரது விருப்பம். அதை நான் தடுக்க விரும்பவில்லை. கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்பது மட்டுமே எண்களின் நிலைப்பாடு. 1,000 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்திய ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. ரூ.5,000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டது திராவிட மாடல் தான்.

திமுகவை கற்பனையில் கூட யாராலும் அழிக்கமுடியாது. அதிமுக, பாஜக போன்ற வெகுஜன விரோதிகளுடன் தற்போது நாம் மோதிக்கொண்டியிருக்கிறோம். பாஜகவின் பாதம் தாங்கிகளாக இருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்தது அதிமுக. பாஜகவுடன் இருந்தால் முற்றிலும் ஒழிக்கப்படுவோம் என்று பயந்து அதிமுக உள்ளே வெளியே ஆடுகிறது. மிரட்டல், உருட்டல்கள் எல்லாம் திமுகவை எதுவும் செய்ய முடியாது என்பதால் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.

போகிற போக்கில் யார் மீது வேண்டுமானாலும் அவதூறு பரப்பலாம் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்கள்.  கோயில்களை இடித்துவிட்டதாக பொய்யான புகைப்படங்களை வெளியிட்டு பாஜகவினர் அவதூறு பரப்புகின்றனர். சமூக வலைத்தளங்கள் ஒரே நாளில் புகழின் உச்சத்துக்கு கொண்டு செல்லும், ஒரே நாளில் கீழே இறக்கிவிடும். எனவே, எதிரிகள் இழிவு செய்தாலும் கண்ணியமான முறையில் பதிலடி தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.