நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செய்த செயல்.! பதறிப்போன நிர்வாகிகள்.!

Election2024 : கரும்பு விவசாயி சின்னம் பொரித்த துண்டு அணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா.

மக்களவை தேர்தல் வேலைகள் தமிழகத்தில் வெகு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில், வரும் மார்ச் 27ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் நிறைவடைய உள்ளது. அதனால் இன்றே தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் அளித்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் நாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் கார்த்திகா என்பவர் போட்டியிடுகிறார். கோவை சேர்ந்த B.E பட்டதாரியான இவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை தேர்தல் பரப்புரையாளராக உள்ளார். இவர் இன்று நாகப்பட்டினம் மக்களவை தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.

அப்போது, அவர், கரும்பு விவசாயி சின்னம் பொறித்த துண்டை அணிந்து வந்துவிட்டார். ஏனென்றால் , கரும்பு விவசாயி சின்னமானது தற்போது நாம் தமிழர் கட்சி தேர்தல் சின்னமாக இல்லை. நாம் தமிழர் கட்சிக்கு இன்னும் தேர்தல் ஆணையம் பொது சின்னம் அறிவிக்கவில்லை. அதுவும் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு அளிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர் கார்த்திகா அணிந்து வந்த துண்டை பார்த்த சக நிர்வாகிகள். உடனடியாக துண்டை அகற்ற சொல்லி, பின்னர், சீமான் முகம் பொரித்த துண்டை கொடுத்தனர். அதனை அணிந்து கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தார் கார்த்திகா.