MK Stalin

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

By

கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி பலியான சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது, இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார்.

நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோட்டைமேடு பகுதியில் உள்ள கருணாபுரத்தில் விஷச்சாராயம் விற்கப்பட்டு அதை அருந்தியதால் பலர் உயிரிழந்து வருகின்றனர். தற்போது, பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி வருகிறது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அதிரடியாக மாற்றப்பட்டதுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. மேலும், இந்த சம்பவத்தை கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்தோர்க்கு இரங்கலையும் பல கட்சி தலைவர்கள் தெரிவித்தும் வருகின்றனர்.

அதனை தொடர்ந்து இன்று காலை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்  தொடங்கியது. அதில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு, கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு வாசித்த இரங்கல் அறிக்கையில், கள்ளச்சாராய விவகாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்பின் கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.  சட்டப் பேரவையின் இன்றைய அலுவல்கள் முடிந்தவுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தினார்இந்த ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி,  உளவுத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை செய்தார். மேலும், இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான எ.வ.வேலு,  பொன்முடி உள்ளிட்ட ஆலோசனையில் பங்கேற்றனர்.

Dinasuvadu Media @2023