கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதி கருணாபுரத்தில் விஷச்சாராயம் விற்கப்பட்டதாக தெரிகிறது. அதனை அருந்தியதால் நேற்று பலர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த விஷச்சாராயம் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை ஏற்றுவருகின்றனர்.
உயிரிழந்தவர்களில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 19 பேர், சேலத்தில் 9 பேர், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேர் என இதுவரை 35 பேர் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, விஷச்சாராயம் குடித்து வீட்டிலேயே இருப்பவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். வீடு வீடாகச் சென்று, வாந்தி, வயிற்று எரிச்சல் பாதிப்பு உள்ளோரை 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்க உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.