''குஜராத்தை தென் கொரியாவாக மாற்ற நினைத்தேன்’' மோடி பேச்சு…!!

உத்தரகாண்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ‘நான் குஜராத்திற்கு முதல்வராக பொறுப்பேற்ற போது, அதை தென் கொரியாவாக மாற்ற நினைத்தேன்’ என்று பேசியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநில, டேராடூனில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மோடி, உரையாற்றிய போது, ‘பல நாடுகளுடன் ஒப்பிடும் போது, நமது நாட்டில் இருக்கும் மாநிலங்களின் சக்தி அலப்பரியது. பல சிறிய நாடுகளை விட நமது மாநிலங்களிடம் அதிக திறன் உள்ளது. நான் 2001, அக்டோபர் 7 ஆம் தேதி குஜராத்தின் முதல்வராக ஆன போது, நடந்த சம்பவம் எனக்கு இன்னும் நியாபகம் இருக்கிறது.
அப்போது எனக்கு அரசியல் அனுபவம் குறைவு. முதல்வராக நான் பொறுப்பேற்ற பின்னர் ஒரு பத்திரிகையாளர் என்னிடம், ‘குஜராத்திற்கு எந்த நாட்டை முன் மாதிரியாக எடுத்துக் கொள்வீர்கள்’ என்று கேட்டார். இதைப் போன்ற கேள்விக்கு பொதுவாக, அமெரிக்கா அல்லது இங்கிலாந்து தான் பதிலாக கொடுப்பார்கள். நான், ‘குஜராத்தை தென் கொரியாவாக மாற்ற நினைக்கிறேன்’ என்றேன்.
அவர் என் பதிலுக்கான காரணம் புரியாமல் திகைத்தார். அப்போது தான், நான் குஜராத்தின் மக்கள் தொகையும் தென் கொரியாவின் மக்கள் தொகையும் கிட்டத்தட்ட ஒன்றானவை. நாம் சரியாக பயணித்தால், தென் கொரியாவை போன்று வளர்ச்சியடைய முடியும் என்று விளக்கினேன்’ என்றார்.
அவர் மேலும் பேசுகையில், ‘என் தலைமையிலான அரசு, தொழில் செய்வதை சுலபமாக்கியுள்ளது. வரி விதிப்பு முறையை எளிமையாக்கியுள்ளோம். வங்கித் துறையை வலிமையாக்கியுள்ளோம். இதைப் போன்ற நடைமுறைகள் தான், தொழில் செய்வதை சுலபமாக்கும். நாட்டை நவீனமயமாக்குவதில் மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. 400 புதிய ரயில் நிலையங்கள், 100 விமான நிலையங்களை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று பேசியுள்ளார்.
DINASUVADU 

Leave a Comment