Vairamuthu

நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும் கள்ளச் சாராயம் ஒழிக்கப்பட வேண்டும்- வைரமுத்து!

By

கள்ளக்குறிச்சி : கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி 47 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து ‘சாராயம் குறைக்கப்பட வேண்டும் கள்ளச் சாராயம் ஒழிக்கப்பட வேண்டும்’ என கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தியவர்களில் 165 பேர் உள்நோயாளிகளாக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, மற்றும் சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த நிலையில்,   இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவிக்க  பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று வருகிறார்கள். ஏற்கனவே, எடப்பாடி பழனிச்சாமி, பிரேமலதா விஜயகாந்த், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, செல்வப்பெருந்தகை ஆகியோர் அஞ்சலி செலுத்திவிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும். சிலர் சமூக வலைத்தளங்களின் மூலம் தங்களுடைய இரங்கலையும். இந்த சம்பவம் குறித்து கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” எந்தத் தேன் உணவானதோ அதே தேனில் எறும்பும் எந்தத் தண்ணீரில் மலரானதோ அதே தண்ணீரில் தாமரையும் எந்த நதியில் உயிர்கொண்டதோ அதே நதியில் மீனினமும் செத்து மிதப்பது தெரிந்த பின்னும் எந்த மது மறக்கச்செய்கிறதோ அதே மதுதான் மரிக்கச்செய்கிறது என்பதனை மறந்தனயே மனிதா!

நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும் கள்ளச் சாராயம் ஒழிக்கப்பட வேண்டும் இறப்பின் காரணம் எதுவாயினும் இரங்கத்தான் வேண்டும் சாராயச் சாவுகளுக்காகவல்ல; சந்ததிகளுக்காக” என வைரமுத்து கூறியுள்ளார்.

Dinasuvadu Media @2023