எப்போதுமே கேட்டதை கொடுப்பதில்லை.. மத்திய பாஜக அரசு மீது பாய்ந்த இபிஎஸ்!

Edapadi Palnisamy: மாநில அரசு கேட்கும் நிதியை, மத்திய அரசு வழங்கியதில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரத்தில் நீர் மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இபிஎஸ்-யிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது, புயல், மழை பாதிப்புக்காக தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய பாஜக அரசு எப்போதுமே சரியாக கொடுப்பதில்லை. ஏற்கனவே கஜா, வர்தா புயல் வந்தபோது ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நாங்கள் கேட்ட நிதியை கூட மத்திய அரசு வழங்கவில்லை.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதும் கூட குறைந்த அளவே நிதி வழங்கப்பட்டது என்றார். இதன்பின் பேசிய அவர், தமிழ்நாட்டில் வெயில் அதிகமாக இருந்ததால் வாக்குப்பதிவு சற்று குறைந்துள்ளது. ஒப்புகை சீட் வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பு குறித்து தற்போது கருத்து கூற இயலாது.

அதேபோல் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்காக பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது குறித்த கேள்விக்கும் கருத்து கூற இபிஎஸ் மறுப்பு தெரிவித்தார். தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் அதுகுறித்து பேச இயலாது எனவும் குறிப்பிட்டார்.

மேலும், தமிழகத்தில் போதைப்பொருளை தடுக்க தவறியதால் இளைய சமுதாயம் மோசமான அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. போதைப்பொருள் விவகாரத்தில் இரும்புக்கரம் கொண்டு அடக்காமல் திமுக அரசு அலட்சியம் காட்டி வருவதாகவும் குற்றசாட்டினார்.