,
lpg safety tips

சமையலறையில் கேஸ் கசிவா? அப்போ உடனே இதை செய்யுங்கள்.!

By

கேஸ் கசிவு : இன்றைய காலத்தில் சிலிண்டர் இல்லாத வீடே இல்லை என்றே சொல்லலாம். நாட்டில் கோடிக்கணக்கான வீடுகளில் எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம், சாதாரண பெண்களின் வாழ்க்கை மிகவும் எளிதாகிவிட்டது.

ஒருபுறம், மக்களுக்கு இது உதவிகரமாக இருக்கிறது என்றால் மறுபுறம், சில அலட்சியத்தால், சில நேரங்களில் சிலிண்டர்கள் மிகவும் ஆபத்தானவை என்பதை நிரூபிக்கின்றன. வீடுகளில் கேஸ் சிலிண்டர்கள் கசியத் தொடங்குவது உண்டு.

அந்த சூழ்நிலையில், அதை கண்டுக்காமல் விட்டால் மிகவும் ஆபத்தானது. இதனால் வீடுகளில் பெரிய தீ விபத்து ஏற்பட்டு, மரணமடைய கூட நேரிடும். இதனை எவ்வாறு கையாளலாம் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கூறியுள்ளது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அதன் அதிகாரப்பூர்வ X தள பக்கத்தில், கேஸ் கசிவு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை மக்களுக்குத் தெரிவித்துள்ளது. இதனுடன், மக்களுக்கு உதவும் அவசர எண்ணையும் அவர் கூறியுள்ளார். எரிவாயு கசிவு ஏற்பட்டால், அவசர சேவை எண் 1906 ஐ அழைக்கவும்.

உங்கள் வீட்டில் எரிவாயு கசிவு ஏற்பட்டால், உடனே பீதி அடைய வேண்டாம், அமைதியாக இருங்கள். முதலில், உங்கள் கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டரை அணைக்கவும். சிலிண்டரை  அணைத்த பிறகு, கேஸ் கசிவை நிறுத்தலாம். மேலும், வீட்டில் இருக்கும் லைட் சுவிட்ச் மற்றும் மண்ணெண்ணெய் அடுப்பு போன்றவற்றை பற்றவைப்பதைத் தவிர்க்கவும் .

அதன் பிறகு, எரிவாயு கசிவு அவசர சேவை எண் 1906 க்கு அழைக்கவும். அமைச்சகத்தின்படி, 1906 என்ற அவசர எண்ணை அழைத்த இரண்டு முதல் நான்கு மணி நேரத்திற்குள், நிறுவனத்திடம் இருந்து உங்கள் பிரச்சனையை தீர்க்க, ஒரு நபரை அனுப்பி வைப்பார்கள். அவர் வந்து பிரச்சனையை கையாளுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinasuvadu Media @2023