கெஜ்ரிவாலை பதவி நீக்குங்க… மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவு!

Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யகோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மாதம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதன்பின் நீதிமன்றம் அனுமதியுடன் மார்ச் 21ம் தேதி முதல் அரவிந்த் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது.

அமலாக்கத்துறை காவல் சென்ற 1ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மீண்டும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் உள்ள  2ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் நீக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதாவது, மாநிலத்தை நாங்கள் நிர்வாகிக்கவில்லை, எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தீர்வை அளிக்க முடியாது என கூறி இந்து சேனா என்ற அமைப்பின் தேசிய தலைவர் விஷ்ணு குப்தா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஏற்கனவே, கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது மனுவையும் டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது.