#BREAKING: பாதுகாப்பு வசதியுடன் பேருந்து சேவை – தொடக்கி வைத்தார் முதலமைச்சர்!

நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பட்டன் வசதி கூடிய 500 பேருந்துகளின் சேவை தொடக்கம்.

நிர்பயா பாதுகாப்பு நகர திட்டத்தின் கீழ் மாநகர போக்குக்குவரது கழகங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 500 பேருந்துகளில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில்,  நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு வசதியுடன் கூடிய 500 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.

மொத்தம் 2,500 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்ட 500 பேருந்துகளின் சேவை தொடங்கியுள்ளது. பேருந்தில் பயணிக்கும் போது எதாவது பிரச்சனை என்றால், அவசர அழைப்பு பொத்தானை அழுத்தினால், நேரடியாக கட்டுப்பாடு அறையில் ஒலி எழுப்பும், இதன் மூலம் பெண்களுக்கோ அல்லது குழந்தைகளுக்கோ பிரச்சனை என்றால், அருகில் இருக்கும் காவல்துறை மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டவர்கள் உதவி புரிவார்கள் என்பதாகும்.

பாதுகாப்பு வசதியுடன் பேருந்து சேவை தொடக்க நிகழ்வில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும், இந்த நிகழ்வின் போது, 136 போக்குவரத்து பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

Leave a Comment