மீண்டும் மோடி.! இது ஒரு வித்தியாசமான தேர்தல்… அண்ணாமலை பேட்டி.! 

2024 நாடாளுமன்ற தேர்தல் தேதி இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. ஏப்ரல், மே மாதங்களில் பல்வேறு கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் நிர்வாக வேலைகளில் தேர்தல் ஆணையங்கள் ஈடுபட்டு வருகின்றன. அதே போல தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரையில் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.

அமைச்சர்கள் சொத்துகுவிப்பு வழக்கு.. ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் , விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பிரதான கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதிமுக – பாஜக கூட்டணி முறிந்ததால் அந்த கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் யார் தலைமையில் கூட்டணி அமைக்க உள்ளன என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் பாஜக கூட்டணி நிலவரம் குறித்து மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறுகையில், எங்களை (பாஜக) பொறுத்தவரை பிரதமர் மோடியை யார் ஏற்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி அமைப்போம். தமிழகத்தில் கூட்டணி என்பது வேகமாக மாறும் நிலை தான் உள்ளது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் இதுவரை பார்க்காத வித்தியாசமான தேர்தல். மீண்டும் பிரதமர் மோடி தான் ஆட்சிக்கு வரவுள்ளார் என்று அனைவருக்கும் தெரியும்.

இந்த மாதம் (பிப்ரவரி) முடிவதற்குள் ஒரு முடிவு தெரியும். இம்மாத இறுதியில் ஜே.பி.நட்டா வருகிறார். பிரதமர் மோடி வருகிறார். அப்போது தமிழக அரசியலில் கூட்டணியில் பல்வேறு மாற்றங்கள் வரும்.  எங்கள் கட்சி (பாஜக) தலைமை சொன்னால் நான் தேர்தலில் நிற்பேன். இல்லையென்றால் இப்போ இருக்கும் கட்சி பணிகளை செய்வேன்.

இப்போதைக்கு நீலகிரி மாவட்ட பொறுப்பளராக எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட பொறுப்பாளராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். என்னை யாத்திரை போக சொன்னார்கள் அதனை செய்து வருகிறேன். மீண்டும் சொல்கிறேன். நரேந்திர மோடி தான் மீண்டும் பிரதமர்  என இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

Leave a Comment