பிரதமர் மோடியின் ‘விக்சித் பாரத்’ யாத்திரை… அனைத்து அமைச்சர்களுக்கும் கண்டிப்பான உத்தரவு.!

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ள நிலையில், பிரதான ஆளும் கட்சி பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பலவேறு கட்சியினர் தங்கள் தேர்தல் வேலைகளை ஆரம்பித்துள்ளனர். அதிலும் ஆளும் பாஜக அரசு தற்போதே “விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை” (Viksit Bharat Sankalp Yatra) எனும் திட்டம் மூலம் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை மூலம், இந்தியா முழுக்க உள்ள 2.55 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் , 18 ஆயிரம் நகர்ப்புறங்களுக்கு அரசு செயல்படுத்திய திட்டங்களை விளம்பரப்படுத்த சிறப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வலம் வருகின்றன.

தெலுங்கானா தேர்தல் : அனல் பரந்த இறுதிக்கட்ட பிரச்சாரம்.! நாளை மறுநாள் மக்கள் தீர்ப்பு.!

இதற்காக 2,500க்கும் மேற்பட்ட நடமாடும் வேன்களும், 200க்கும் மேற்பட்ட மினி திரை அமைக்கப்பட்டு இருக்கும் வேன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையை கடந்த நவம்பர் 15ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார்.

நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தில் மத்திய அமைச்சர்கள் முழு வீச்சில் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி திங்களன்று துவங்க உள்ள நிலையில் ,பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் தான் பிரதமர் மோடி விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை குறித்து வலியுறுத்தினார்.

இந்த திட்டம் மூலம், கிசான் கிரெடிட் கார்டு, கிராமப்புற வீட்டுவசதித் திட்டம், உஜ்வாலா திட்டம் மற்றும் PM ஸ்வாநிதி யோஜனா போன்ற பல்வேறு அரசாங்கத் திட்டங்கள் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன.

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோராம், தெலுங்கானா என 5 மாநில தேர்தல் நடைபெற்று வந்ததால் வரும் டிசம்பர் 5ஆம் தேதி வரையில் தேர்தல் விதி அமலில் உள்ளதால் மேற்கண்ட 5 மாநிலங்களில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை வாகனங்கள் செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.