#Justnow:சற்று நேரத்தில்…அதிமுக நிர்வாகிகள் கூட்டம் – ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில்,அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில்,அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.ஆனால், வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு  நடைபெறாது என ஓபிஎஸ் ஆதரவாளரும்,முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் நேற்று தெரிவித்திருந்தார்.

அதே சமயம்,ஜூலை 11 இல் நடைபெறும் பொதுக்குழுவில் நிச்சயம் ஈபிஎஸ் அவர்கள் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும், கழகத்தின் தொண்டர்கள் தற்போது ஈபிஎஸ் அவர்களுக்கு தான் ஆதரவாக உள்ளனர் என்றும் அவரது ஆதரவாளரான பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்திருந்தார்.

இதனிடையே,தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றப்பயணம் தொடங்கியுள்ள நிலையில்,நேற்று சென்னையில் இருந்து மதுரை சென்றார்.அப்போது புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் அம்மா அவர்களுடைய உயிரிலும் மேலான தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர் என்றும், அவர்களின் இதயத்திலிருந்து என்னை யாராலும் நீக்க முடியாது என்றும் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து,மாவட்ட வாரியாக நிர்வாகிகள் தொண்டர்களை சந்தித்து,அவர்களின் ஆதரவை திரட்டி,ஒற்றைத் தலைமை  தீர்மானத்தை தடுக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகவும்,பொதுக்குழுவில் ஈபிஎஸ் தரப்பினர் தன்னை அவமானப்படுத்தியதை தொண்டர்களிடம் முறையிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில்,அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம்  சென்னை ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்னும் சற்று நேரத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் எனவும்,தவறாமல் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில்,ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி இன்று நடைபெற உள்ள தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்துள்ளார்.மேலும்,சட்டத்திற்கு புறம்பாக கூட்டப்படவுள்ள இக்கூட்டத்தில் ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டால் அது ஒருங்கினைப்பளர்கள் மற்றும் தொண்டர்களை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment