ரூ.900 கோடி ஜிஎஸ்டி மோசடியில் தமிழகத்தில் போலி நிறுவனங்கள்.! புலனாய்வு துறை அறிவிப்பு.!

  • சென்னை மண்டல ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது.
  • அதில் சென்னையில் போலி நிறுவனங்கள் மூலம் ரூ.900 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மண்டல ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கடந்த 19 மற்றும் 20-ம் தேதிகளில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை ஈடுபட்டனர். அதில் விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் கடன் பெற்று தருவதாக கூறி, அவர்களது பேன் கார்டு மற்றும் ஆதார் கார்டை இந்த மோசடி கும்பல் வாங்கியுள்ளது. அதனைக் கொண்டு வங்கிகளில் கணக்கு தொடங்கியதுடன், பல போலி நிறுவனங்களையும் ஆரம்பித்துள்ளனர். அதன் மூலம் ரூ.900 கோடி போலியான ரசீதுகளை உருவாக்கி, 152 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இந்த மோசடியில் செயல்பட்ட 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் கமிசனாக பெற்ற ரூ.24 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், ஒரு வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது நூற்றுக்கணக்கான பேன் கார்டு, ஆதார் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஊரகப் பகுதிகளை சேர்ந்த பெண்களுடையதாக இருந்துள்ளது.

மேலும், வங்கி காசோலைகள், ரப்பர் ஸ்டாம்புகள், டெபிட், கிரெட் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை மண்டல ஜிஎஸ்டி புலனாய்வு தலைமை அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.