#Breaking:சற்று முன்…நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது!

கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி மத்திய  பட்ஜெட் கூட்டத் தொடரானது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. அதன்பின்னர்,மத்திய பட்ஜெட்டைபிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள்வெளியாகின.

இதனையடுத்து,பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு பிப்ரவரி 11 ஆம் தேதியில் நிறைவடைந்தது.கொரோனா பரவல் காரணமாக முதல் அமர்வு காலையில் மாநிலங்களவையும்,மாலையில் மக்களவையும் செயல்பட்டன.

இந்நிலையில்,மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு சற்று முன்னர் தொடங்கியுள்ளது.தற்போது,கொரோனா பரவல் குறைந்து காணப்படுவதால் நாடாளுமன்ற இரு அவைகளும் வழக்கம் போல் காலை 11 மணிக்கு ஒரே நேரத்தில் தொடங்கியது.

இந்த மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில்,பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில்,யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.மேலும்,உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நாளை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்.

இதனிடையே,உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் கல்விக்கு மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

அதே சமயம்,தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் குறைப்பு,உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டதில் தாமதம், அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை,விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வானது ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.