செய்தியாளர் சந்திப்பில் நடந்த சம்பவம்.. தென் கொரியா எதிர்க்கட்சித் தலைவருக்கு கத்திகுத்து!

தென் கொரியா எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியுங், இன்று செய்தியளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது,  தென் கொரியாவின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே மியுங், தெற்கு துறைமுக நகரமான புசானின் கதியோக் தீவில் புதிதாக கட்டப்பட்டு வரும் விமான நிலைய பணிகளை மேற்பார்வையிட இன்று காலை அங்கு சென்றுள்ளார்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியுங்கின் கழுத்தின் இடதுப் பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கத்திக்குத்தால் படுகாயமடைந்த லீ ஜே மியுங், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர் அவரை உடனடியாக மீட்ட பாதுகாப்பு வீரர்கள் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் லீ ஜே மியுங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அடையாளம் தெரியாத நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்… இதுவரை 48 உயிரிழப்பு!

செய்தியாளர்களை சந்தித்து லீ ஜே மியுங் பேசிக் கொண்டிருந்தபோது, தனது ஆதரவாளராக காட்டிக் கொண்டு கூட்டத்தில் தள்ளுமுள்ளு செய்த ஒருவர், மியுங்கின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டதாக காவல் அதிகாரி கூறியுள்ளார். தாக்குதல் நடத்தியவர், 18 சென்டிமீட்டர் கத்தியைப் பயன்படுத்தினார் என்றும் அதனை ஆன்லைனில் வாங்கியுள்ளார் எனவும் புசான் காவல்துறை அதிகாரி சோன் ஜெ-ஹான் தெரிவித்தார்.

லீ மீது தாக்குதல் நடத்தியவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லீ ஜே மியாங் மர்ம நபரால் தாக்கப்பட்ட  வீடியோ மற்றும் புகைப்படங்களை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற தென் கொரியா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட லீ, மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.