தேநீர் கடைகள் காலை 6 முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி.! பார்சல் 9 வரை வழங்கப்படும்.!

உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 3 ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மாநில அளவிலான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, செப்.30 வரை நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதன்படி, நாளையுடன் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரையின்படி, தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்த கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கில், அரசால் ஏற்கனவே வெளியிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதில் பார்சல் சேவை இரவு 9 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, பலரும் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய கோரிக்கை விடுத்த நிலையில், மாவட்டங்களுக்கு இடையான இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்துள்ளது.

மேலும், தாங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் பிற விருந்தோம்பல் சேவைகள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி வழங்கப்பட்டடுள்ளது. உடற்பயிற்சி மற்றும் அனைத்து விளையாட்டு பயிற்சிகளுக்காக பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்கும் என்றும் ஆனால், விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.