யார் இந்த சுப்ரதா ராய்.? சஹாரா குழுமமும் இந்திய கிரிக்கெட் அணியும்.!

சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் நேற்று (14.11.2023 செவ்வாய்) இரவு 10.30 மணியளவில் மும்பை தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவவரது பெயரை காட்டிலும், அவர் உருவாக்கிய சஹாரா குழுமத்தின் பெயரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

தொடக்கம் :

ரியல் எஸ்டேட் தொடங்கி, தொலைக்காட்சி ஊடகம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கொடிகட்டி பரந்த சமயம் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ஹாக்கி அணியின் ஸ்பான்சராக இருந்தது சுப்ரதா ராயின் சஹாரா நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

SAHARA – இந்திய கிரிக்கெட் அணி :

80, 90களில் பிறந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவர்கள் ஆஸ்தான கிரிக்கெட் வீரரை சஹாரா ஜெர்சியில் தான் அதிகம் கொண்டிருப்பர். அதிலும் குறிப்பாக இந்தியா இரண்டாவது முறையாக 2011இல் தோனி தலைமையில் உலகக்கோப்பையை வென்றபோது வரையில் SAHARA குழுமம் ஸ்பான்ஸர் செய்த ஜெர்சியையே அணிந்து இருந்தனர்.

சுப்ரதா ராய் :

பீஹார் மாநிலத்தில் 1948இல் பிறந்த சுப்ரதா ராய், பொறியியல் பட்டம் பெற்று பின்னர் தொழில் செய்வது மீதான ஆர்வம் காரணமாக 1976இல் பைனான்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அதன் பிறகு ரியல் எஸ்டேட் தொழிலில் கால் ஊன்றுகிறது சஹாரா குழுமம்.  அதன் பின்னர் 1992இல் ராஷ்டிரிய சஹாரா என தொலைக்காட்சி ஊடகம் தொடங்கி அதன் பின்னர் அது சஹாரா ஒன் என மாறியது.

இந்திய அணியில் SAHARA :

2001ஆம் வருடம் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சராக சஹாரா குழுமம் பொறுப்பேற்றது. அது முதல் 2013ஆம் ஆண்டு வரையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக சஹாரா நிறுவனம் நீண்ட வருடங்கள் இருந்துள்ளது. அதன் பிறகு 4 நிறுவன ஸ்பான்சர்கள் இந்திய அணிக்கு வந்துவிட்டனர். தற்போது டிரீம் 11 நிறுவனம் ஸ்பான்ஸர் செய்து வருகிறது.

SAHARA வீழ்ச்சி :

தொழிலில் உச்சத்தில் இருந்த சஹாரா நிறுவனம் தங்கள் ஹவுசிங் தொழிலில் முதலீட்டில் குளறுபடி உள்ளதாக பங்குசந்தைகளை மேற்பார்வையிடும் செபி (SEBI) குற்றம் சாட்டியது. இதனால் 24000 கோடி ரூபாயை முதலீட்டாளர்களுக்கு திருப்பி செலுத்த கோரியது. ஆனால் அதனை மறுக்கவே, 2014இல் சுப்ரதா ராவை கைது செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது . அதன்படி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் ராய் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டு இருந்தார்.

இறுதிநேரத்தில் சுப்ரதா ராய் :

செபி நடவடிக்கை, கைது, திகார் சிறை, ஜாமீன் என சுப்ரதா ராவ் மற்றும் சஹாரா குழுமமும் சரிவை சந்தித்தது. அதன் பின்னர், ரத்த அழுத்தம், உள்ளிட்ட உடல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த ராய்க்கு கடந்த ஞாயிற்று கிழமை உடல் நிலை மோசமானது. அதன் பின்னர் தான் அவர் மும்பை அம்பானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும் நேற்றிரவு 10.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.