சாலை விபத்து இழப்பீடு : குற்றவியல் வழக்கு போல விசாரிக்கப்பட வேண்டியதில்லை.! உயர்நீதிமன்றம் கருத்து.!

கடந்த ஆகஸ்ட் 13, 2019ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரு, நாகரபாவி துர்காபரமேஸ்வரி கோயில் அருகே திவாகர் எனும் ஹோட்டல் ஊழியர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, கார் மோதி விபத்தில் சிக்கினார். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. ஆனால், சிகிச்சைபலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.

திவாகர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விபத்து காப்பீடு பெற்று இருந்ததால், அவரது இறப்பை அடுத்து  மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம் (MACT) திவாகரின் பெற்றோருக்கு ரூ.15,43,600 இழப்பீடு வழங்கியது. இதனை எதிர்த்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.

அதில், விபத்து குறித்த புகாரில் விபத்துக்கு காரணம் என கூறப்படும் காரின் விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும், திவாகரின் அலட்சியமே அவரது மரணத்திற்கு காரணம் என்றும் காப்பீட்டு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டது.

இந்த வழக்கானது நீதிபதிகள் கே சோமசேகர் மற்றும் ராஜேஷ் ராய் கே ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னர் விசாரணைக்கு வந்தது.  அவர்கள் கூறுகையில், சாலை விபத்துகளின் காரணமாக எழுப்பப்படும் இழப்பீடு கோரிக்கைகளை குற்றவியல் விசாரணை போல் ஆதாரங்களை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினர்.

மேலும், சாலை விபத்துகளில் இழப்பீடு கோருவது தொடர்பான வழக்குகளில், குற்றவியல் வழக்குகள் போல விசாரணை நடைபெற்று ஆதாரங்கள் நிரூபிக்கப்படும் என்று எதிர்பார்க்கமுடியாது என்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அமர்வு தெரிவித்து , விபத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீட்டை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்தது.