#Breaking:திருப்புதல் தேர்வு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நாளை முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம்!

சென்னை:பழுதான பள்ளி கட்டடங்களை இடிப்பது,திருப்புதல் தேர்வு எப்போது நடத்தலாம்? போன்றவை குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

நெல்லையில் சாஃப்டர் பள்ளிக் கழிப்பறை சுவர் விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில்,அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி கட்டடம் குறித்து கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள பழுதான பள்ளி கட்டடங்களை இடிப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நாளை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறவுள்ளது.

மேலும்,கூடுதலாக தேவைப்படும் வகுப்பறைகள்,அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம்,பள்ளியில் பாலியல் புகார் பெட்டிகள் அமைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக,பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு,காலாண்டு தேர்வு ரத்தான நிலையில்,திருப்புதல் தேர்வு எப்போது நடத்தலாம்? என்பது குறித்தும் நாளை ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.