84 வினாடியில் நடத்தப்பட்ட பிராண பிரதிஷ்டை… காரணம் என்ன?

பெரும் சர்ச்சைக்கும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 3 தளங்களுடன் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய நபர்கள் மற்றும் மக்கள் என பலர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், அயோத்திக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி சரியாக மதியம் 12.10 மணிக்கு கோயில் கருவறையில் ஸ்ரீராமர் சிலை பிராண பிரதிஷ்டைக்கான பூஜைகளை தொடங்கினார். இந்த பூஜையில், பிரதமர் மோடியுடன், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் இருந்தனர்.

இதையடுத்து, கோயிலில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலை பிரதிஷ்டைக்கான 84 வினாடி நேரம் மட்டுமே என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, சரியாக 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கண்களில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டது.

வரலாற்று நிகழ்வு.! திறக்கப்பட்ட ராமர் சிலை.! பிரதமர் மோடி உள்ளிட்டோர் சாமி தரிசனம்.!

இதன்பின்னர், பால ராமருக்கு பிரதமர் மோடி, முதல் பூஜையை செய்து வழிபட்டார். பிரதமரை தொடர்ந்து யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வழிபாடு நடத்தினர். இதனைத்தொடர்ந்து, ஸ்ரீ ராம பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அயோத்தியில் ராமர் சிலைக்கு 84 வினாடியில் பிராண பிரதிஷ்டை செய்யப்படத்துக்கான காரணம் என்பது குறித்து பார்க்கலாம்.

இந்த 84 வினாடிகள் சூரிய உதயத்திற்கும், சூரிய அஸ்தமனத்திற்கும் இடையில் ஒவ்வொரு நாளும் ஒரு முறை நிகழும் 48 நிமிட ‘சுப முகூர்த்தத்தில்’ மிகவும் புனிதமான நேரம் என நம்பப்படுகிறது. அதன்படி, இன்று சுப முகூர்த்தம் மதியம் 12.16 மணிக்கு தொடங்கி 12.59 மணி வரை இருந்தது. ஆனால், இதில் நல்ல தருணம் 12:29:08 முதல் 12:30:32 வரை 84 வினாடிகள் மட்டுமே. இதனால், அந்த 84 வினாடிகள் என்ற சுப முகூர்த்தம் அல்லது மங்களகரமான நேரம் நீடிக்கும் போது, பிரதமர் மோடி சிறிய தங்க குச்சியால் மைப் பூசி, பால ராமர் சிலையை திறந்து வைத்தார்.

அதுமட்டுமில்லாமல், அந்த 84 வினாடிகளில் சூரியன் உச்சத்தில் இருக்கும் போது இந்த நிகழ்வு நடைபெற்றது. இது சூரிய உதயத்திற்கும், சூரிய அஸ்தமனத்திற்கும் இடைப்பட்ட நாளின் 8வது முகூர்த்தமாகும். இது முகூர்த்த நேரத்தில் 48 நிமிடங்கள் இருக்கும். அந்த சமயத்தில் ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது. இந்து மத சாஸ்திரங்களின்படி, மிருகசிரா நட்சத்திரம், அமிர்த சித்தி யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகம் நேரத்தில் ராமர் சிலை திறக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதுவே அந்த 84 வினாடியின் காரணமாகும்.