அமைச்சர், எம்எல்ஏ பதவியை இழந்த பொன்முடி ..!

உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது ரூ.1.72 கோடி அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவியை விசாலாட்சி மீதும் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவித்தது. அதன்படி சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் தலா மூன்றாண்டு சிறை  தண்டனையும், தலா 50 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் கூடுதலாக ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி  உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு பிறப்பித்த பிறகு தண்டனையை  குறைக்க வேண்டும் என்றும் மேலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என பொன்முடி தரப்பில்  கோரிக்கை வைக்கப்பட்டது.

சொத்துகுவிப்பு வழக்கு : அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை…!

இதைத்தொடர்ந்து, நீதிபதி 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைப்பதாகவும், 30 நாட்களுக்கு மேல் அவகாசம் தேவைப்பட்டால் 30 நாட்கள் நெருங்கும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவித்தார். இந்நிலையில், பொன்முடிக்கு  மூன்று ஆண்டுகள் சிறை  தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர், எம்.எல்.ஏ பதவியை பொன்முடி இழந்தார்.