பரபரக்கும் பருத்திவீரன் சர்ச்சை…சைலண்டாக ஸ்கொர் செய்யும் அமீர்.!

பருத்திவீரன் சர்ச்சைக்கு மத்தியில், வாடிவாசல் படத்திற்கான பேச்சுவார்த்தையில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் அமீர் இருக்கும் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோருக்கு இடையே பருத்திவீரன் பட சமயத்தில் நடந்த பிரச்னை தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஞானவேல் ராஜா கொடுத்த பேட்டி தான். பின், ஞானவேல் சொல்வதில் ஒன்றில் கூட உண்மை இல்லை என இயக்குனர் அமீர் அறிக்கை ஒன்றையும் வெளியீட்டு இருக்கிறார்.

அதன் பிறகு, 16 ஆண்டுகளாக தொடரும் இந்த பருத்திவீரன் சர்ச்சை குறித்து பருத்தி வீரன்’ படத்தில் தொடர்புடைய நடிகர்கள் சமுத்திரக்கனி, சசிகுமார் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் பலர் அமீருக்கு ஆதரவாகவும், ஞானவேல்ராஜாவை கடுமையாக சாடியுள்ளனர். அந்த வகையில், இப்போது ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குமென தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வேதனையில் இருக்கிறாராம்.

அதாவது, பருத்திவீரன் படம் மற்றும் அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், இதனால் ஏற்பட்ட பஞ்சாயத்தால் ‘வாடிவாசல்’ மேலும் தாமதமாக கூடும் என்ற வருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக வாடிவாசல் படத்தில், அமீர் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அந்த தகவல் தற்பொழுது உறுதியாகியுள்ளது. பருத்திவீரன் சர்ச்சைக்கு இது முற்று புள்ளி வைக்கும் வகையில் உள்ளது.

ஆம், இந்த படத்தில் அமீர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. மேலும் வாடிவாசல் படத்தில் தையல்காரர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. வெற்றி மாறன் வசனம் எழுதும் போது அவரது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் அதிகரித்து அமீருக்கு ஏற்றார் போல் உருவாக்கியள்ளாராம். அடுத்த ஆண்டு முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா  நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.  படத்தின் டெஸ்ட் ஷூட் கடந்த ஆண்டு நடைபெற்றது. அதற்கான சின்ன வீடியோ ஒன்றும் வெளியானது.

16 ஆண்டுகளாக தொடரும் பருத்திவீரன் சர்ச்சை…வேதனையில் தயாரிப்பாளர் தாணு.!

ஞானவேல்ராஜா கூறிய குற்றச்சாட்டு

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ”மௌனம் பேசியதே படத்தின் போதே சூர்யாவுக்கும் அமீருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது எனவும், அதற்கு காரணம் அவர் சூர்யாவிடம் சரியாக பேசாமல் அவரை சரியாக நடத்திக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்து இருந்தார்.

அது மட்டுமின்றி,பருத்திவீரன் திரைப்படம் 2 கோடி 75 லட்சத்தில் எடுக்கப்படவேண்டிய திரைப்படம். ஆனால், படம் எடுத்து முடிக்க அதிக பணம் ஆகிவிட்டது. அன்று எனக்கு சினிமாவை பற்றி பெரிய அளவுக்கு எதுவும் தெரியாது. பருத்திவீரன் தான் என்னுடைய முதல் படம் எனவே, கணக்கில் என்னை அமீர் ஏமாற்றிவிட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்காமல் திருடி சம்பாதிக்கிறார்” எனவும் கடுமையாக தாக்கி பேசினார்.

முற்றுப்புள்ளி வைத்த அமீர்

இந்நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமீர், பருத்திவீரன் தொடர்பாகவும் என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும் ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்று கூட உண்மையில்லை. பருத்திவீரன் படம் தொடர்பாக எங்கள் இருவருக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் இல்லை, முதல்கட்ட படப்பிடிப்புக்கு வழங்கிய தொகையை தவிர அவர் வேறு எந்த தொகையையும் தராமல் படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு போனவர் அவர்.

“பருத்திவீரன்” படம் தொடர்பான வழக்கு, இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற காரணத்தினால், வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் பேரிலேயே நான் இன்னும் பதிலளிக்காமல் இருக்கிறேன். பருத்திவீரன் படப்பிடிப்பு சூழல் அறிந்த திரைத்துறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் கலைஞர்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்பது எனக்கு வியப்பை தருகிறது என்று தனது நீண்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார் இயக்குனர் அமீர்.