அரசியல் தலையீடு இல்லை.., யாரும் அச்சப்பட தேவையில்லை – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

கோடநாடு வழக்கில் உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டம்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக, ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கு, தற்போது மீண்டும் புதிதாக வந்து இருக்கக்கூடிய அரசு கையில் எடுத்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் அதிமுகவினரின் போக்கு உள்ளது என பேசியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என ஏற்கனவே, தேர்தல் நேரத்தில் திமுக வாக்குறுதி கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் நீதிமன்றம் அனுமதி பெற்று தான் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆகவே, இது தனிப்பட்ட அரசியல் தலையீடோ, நோக்கமும் அல்ல, பழிவாங்குற எண்ணமோ நிச்சயம் இல்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமே தவிர, வேறு யாரும் இதற்கு பயந்து அச்சப்பட தேவையில்லை.

இந்த அரசு நிச்சயம் சட்டத்தின் ஆட்சியை நடத்தும். கோடநாடு வழக்கு தொடர்பாக நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்று வரும் விசாரணையை எதிர்க்கட்சி தலைவர் களங்கம் சுமத்தியுள்ளதால், அது இல்லை என்பதை தெளிவுபடுத்துவதற்காக தான் இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

மேலும், மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை தான் தற்போது நிறைவேற்றி வருகிறோம். இன்னும் பல இருக்கிறது. இதனை பாமக தலைவர் ஜிகே மணி, பாஜக நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.