மூன்று நாள் பயணமாக இன்று இலங்கை செல்லும் நிர்மலா சீதாராமன்!

இலங்கை செல்லும் நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் அரசு முறை பயணமாக இன்று இலங்கை செல்ல உள்ளார்.

அங்கு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் SBI வாங்கி கிளைகளை திறந்துவைக்கும் நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாண நூலகம், கலாச்சார மையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார்.

பின்னர், இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்த 200வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், இலங்கை அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட NAAM 200 இல் உரையாற்றுவார்.  இந்நிகழ்வில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதையடுத்து, கொழும்பில் நடைபெறும் இந்திய இலங்கை வர்த்தக உச்சி மாநாட்டில் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. மேலும், இந்த பயணத்தின்போது மத ஸ்தலங்களில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில், இலங்கைத் தலைமையுடன் அவர் கலந்துரையாட உள்ளார். இதற்கிடையில், கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியா இதுவரை இல்லாத வகையில் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான அடிப்பட்டியில் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.