ஆந்திராவில் 60 இடங்களில் என்ஐஏ சோதனை!

ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, இடதுசாரி தீவிரவாதம் அல்லது நக்சல் வழக்கில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி, திருப்பதி, கடப்பா, அனந்தப்பூர், குண்டூர், நெல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் நக்சலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் வழக்கறிஞர்கள், புரட்சி எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு இயக்க தலைவர்கள் வீடுகள், அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது.

இரு மாநிலங்களிலும் சந்தேக நபர்களின் இருப்பிடங்கள் மற்றும் மறைவிடங்களில் சோதனை இன்னும் நடந்து வருகிறது. அதன்படி, இன்று காலை முதல் தனி NIA குழுக்கள் மாநில போலீஸ் படைகளுடன் சோதனைகள் நடந்து வருகிறது. தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கரில், தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) சம்பந்தப்பட்ட வெடிகுண்டு பொருட்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவை மீட்டெடுத்தது தொடர்பான வழக்கில் தொடர்ச்சியாக சோதனைகள் நடந்து வருகிறது.

ஜூன் மாதம் கொத்தகுடேம் செர்லா மண்டலத்தில் மூன்று பேரிடம் இருந்து வெடிகுண்டு பொருட்கள், ட்ரோன்கள் மற்றும் லேத் இயந்திரம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட 12 பேர் மீது என்ஐஏ வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில், இன்று ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது. இதனால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.