மைசூரில் தீ பிடித்த நூலகம்…! 8,243 புத்தகங்களை நன்கொடையாக வழங்கும் கர்நாடக அரசு…!

சையத் இசாக் என்ற 65 வயதுடைய முதியவர் நடத்தி வந்த நூலகம் தீயினால் எரிக்கப்பட்ட நிலையில், கர்நாடக அரசு 8,243 புத்தகங்களை நன்கொடையாக வழங்குகிறது. 

கர்நாடக மாநிலத்தின் மைசூரில் உள்ள உதயகிரி பகுதியில் சையத் இசாக் என்ற 65 வயதுடைய முதியவர் ஒருவர் வசித்து வருகிறார்.கூலி வேலை செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு பொது நூலகம் ஒன்றை நடத்தி வருகிறார். 2011ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அந்நூலகத்தில்,திருக்குறள்,குரான்,பொது அறிவு உள்ளிட்ட 11,000 நூல்கள் இருந்தன.

ஏப்ரல் 9-ம் தேதி காலை நூலகத்திற்கு வந்த அவர், நூலகம் தீயில் எரிந்து தரைமட்டமாய் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து முதியவருக்கு ஆதராவக சிலர் நிதி திரட்டி வருகின்றனர்.சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குள் ரூ.17லட்சம் நிதயுதவி கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சையத் இஷாக்கின் நூலகத்திற்கு, கர்நாடக அரசு 8,243 புத்தகங்களை நன்கொடையாக அளிக்கும் என்று மாநில கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.