ஜாலியா பேசினேன் த்ரிஷா தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க! மன்சூர் அலிகான் பேட்டி

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசிய விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், அவர் மன்னனிப்பு கூட கேட்காத காரணத்தால் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்து கொண்டு வருகிறது. இதற்கிடையில், த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், மன்சூர் அலிகான் மீது  நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 2 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து இன்று மன்சூர் அலிகான் மதியம் 2.30 மணிக்கு சென்னை ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் ஆஜராவதாக தெரிவித்து இருந்தார். அதன்படி அவர் ஆஜரான நிலையில், அவரிடம் 35 நிமிடங்களுக்கு மேலாக விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்ததும் வெளியே வந்த மன்சூர் அலிகான் பேட்டி ஒன்றையும் கொடுத்தார்.

நான் தலைமறைவு ஆகிற ஆள் இல்லை…ஆஜராகிறேன்! – மன்சூர் அலிகான்

அதில் பேசிய மன்சூர் அலிகான் ” அந்த வீடியோவில் பேசியது நான் தான். அதனை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், நான் ஜாலியாக பேட்டி கொடுத்தேன், நிஜமாக தவறான எண்ணத்தில் கொடுக்கவில்லை. நான் ஜாலியாக பேசியதை த்ரிஷா தவறாக புரிந்து கொண்டார். மற்றபடி என்ன ஒரு அர்த்தமும் வைத்து நான் அப்படி பேசவில்லை.

நான் அப்படி பேசியதால் நடிகை த்ரிஷா மனம் வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நானும் மன வருத்தம் அடைகிறேன். நான் என்னுடைய குரல் பிரச்சனைக்காக நாளைதான் வருவதாக இருந்தேன். கடந்த சில நாட்களாகவே எனக்கு தொண்டையில் பிரச்சனை என்னால் பேசமுடியவில்லை. எனவே, அதனால் தான் நாளை வருவதாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன்.

ஆனால், அதற்குள் சமூக வலைதளங்களில் இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் தலைமறைவு, தலைமுறைவு என்று என்னைப் பற்றி தவறாக வதந்தி பரவியதால் தற்போது ஆஜரானேன் இன்று மட்டுமில்லை இந்த வழக்கு விசாரணைக்காக எப்போது என்னை அழைத்தாலும் நான் வர தயாராக உள்ளேன்” என தெரிவித்துள்ளார். இதைப்போல ஆஜராவதற்கு முன்பு நான் தலைமறைவாக ஆக கூடிய ஆள் இல்லை எனவும் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.