சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லும் தமிழக அரசு -கமல்ஹாசன் ட்வீட்

சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லும் தமிழக அரசு என்று கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். 

தமிழகத்தில் கட்டுப்ப்படுத்தப்பட்ட பகுதிகள், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டது.  

ஆனால் மக்கள் நீதி மய்யம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ஊரடங்கு உள்ளபோது மதுக்கடைகளை திறந்தது ஆபத்தானது எனவும், உயர் நீதிமன்றத்தின் விதிமுறைகள் மதுக்கடைகளில் பின்பற்றப்படவில்லை என கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டது.மேலும் ஆன்லைன் மூலம் மது விற்றுக்கொள்ளலாம் என கூறியது.பின்னர் உயர்நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு. எங்கும் வருவோம் உமைத் தடுக்க. மக்கள் நீதியே வெல்லும் என்று பதிவிட்டுள்ளார்.