ஏற்றத்துடன் இந்திய பங்குச்சந்தை..! சென்செக்ஸ் 66,784 புள்ளிகளாக வர்த்தகம்..!

இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

கடந்த சில வாரங்களாக இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அந்தவகையில், 2வது வாரத்தில் சென்செக்ஸ் 65,000 புள்ளிகளைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது. இந்நிலையில் 3வது வாரத்தின் இரண்டாவது நாளான இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 66 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 66,828 புள்ளிகளாக தொடங்கிய சென்செக்ஸ் 194.65 புள்ளிகள் உயர்ந்து 66,784 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 52.85 புள்ளிகள் உயர்ந்து 19,764 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 66,589 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,711 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. சென்செக்ஸ் குறியீடு 66 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகம் நடைபெற்று வருவதால் முதலீட்டாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.

இன்ஃபோசிஸ் லிமிடெட், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, என்டிபிசி லிமிடெட், எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. டைட்டன் கம்பெனி, பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.