,

காலையில் மது விற்பனை.. அமைச்சர் கொடுத்த விளக்கத்தால் வருத்தப்படுகிறேன்.! அண்ணாமலை விமர்சனம்.!

By

Minister Muthusamy - BJP Tamilnadu President Annamalai

காலையில் மது விற்பனை தொடர்பாக அமைச்சர் முத்துசாமி கொடுத்த விளக்கத்தால் வருத்தப்படுகிறேன் என அண்ணாமலை டிவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் முத்துசாமி நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில் காலையில் மதுகுடிப்போர் பற்றி பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் பேசுகையியல், காலையில் மதுகுடிப்போரை குடிகாரன் என்று சொல்வது வருத்தமளிக்கிறது என்றும்,

தூய்மை பணியாளர்கள் , உடல் உழைப்பால் வேலை செய்வோர் தங்கள் வேலையை செய்ய வேண்டுமே என்று குடிக்கிறார்கள். அவர்கள் மாலையில் குடிப்பதில்லை. அதற்கு மாற்று ஏதாவது செய்ய வேண்டும். அதுபற்றி பேசுங்கள் என்று அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்கள் மத்தியில் பேசியிருந்தார்.

அமைச்சரின் கருத்து குறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில், காலையிலேயே ஏன் மது விற்பனை செய்ய வேண்டும் என்ற ஆய்வுக்கு, அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கொடுத்த விளக்கம் கண்டு மிகுந்த வருத்தப்படுகிறேன். தூய்மைப் பணியாளர்கள், கைகளால் சாக்கடைக் கழிவுகளை அகற்றும் நிலையை மாற்ற, மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, அதற்கான தீர்வு காலையில் மது விற்பது அல்ல.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் நாள், தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 425, தமிழகத்தில், தூய்மைப் பணியாளர்கள், கைகளால் கழிவுகள் அகற்றுவதைத் தடை செய்துள்ளதாகக் கூறுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் மட்டும் பணியின்போது 56 தூய்மைப் பணியாளர்கள் மரணமடைந்துள்ளனர். ஆனால் அமைச்சரோ, கைகளால் கழிவுகள் அகற்றும் பணியில், மது அருந்திவிட்டு ஈடுபடச் சொல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

தூய்மைப் பணியாளர்கள் புனர்வாழ்வுக்கு, மத்திய அரசு, குடும்பத்தில் ஒரு தூய்மைப் பணியாளருக்கு ரூபாய் 40,000, தூய்மைப் பணியாளர் குடும்பத்தினர் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு, இரண்டு வருடங்களுக்கு, மாதம் ரூபாய் 3000, தூய்மைப் பணி தொடர்பான சுயதொழில் தொடங்க ரூபாய் ஐந்து லட்சம் வரை மானியம், மருத்துவக் காப்பீடு, தூய்மைப் பணியாளர் மரணங்களைத் தடுக்க, நமஸ்தே திட்டம் என பல திட்டங்கள் தீட்டி, ஆண்டுதோறும் பெருமளவில் நிதி ஒதுக்கி வருகிறது. இந்தத் திட்டங்களை இது வரை பயன்படுத்தாமல் இருக்கும் தமிழக அரசு, சாராய விற்பனையைப் பெருக்குவதில் கவனத்தைச் செலுத்தாமல், மத்திய அரசின் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத் திட்டங்களை அவர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பாஜக சார்பாக கேட்டுக் கொள்கிறேன். என அந்த டிவிட்டர் பதிவில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.