தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று ஒருபக்கம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து திட்டம் தீட்டி வருகிறது. மறுபக்கம் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துகொள்ள ஆளும் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஏற்கனவே எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட எதிர்கட்சிகள் தலைவர்கள் ஒன்றிணைந்து நேற்று முதல் இரண்டு நாள் ஆலோசனை கூட்டத்தை பெங்களூருவில் நடத்துகின்றனர். ஏற்கனவே பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது பெங்களுருவில் இரண்டாவது கூட்டம் நடைபெறுகிறது.
இந்த சூழலில், ஆளும் கட்சியான பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. டெல்லியில் இன்று நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் 34 கட்சிகள் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில், டெல்லியில் இன்று நடைபெறும் பாஜக தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார். இதுபோல கூட்டத்தில் பங்கேற்க தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி டெல்லி புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.