சாதனைகளே இல்லாத சோதனைகளாக நிதிநிலை அறிக்கை – ஓபிஎஸ்…!

சாதனைகளே இல்லாத சோதனைகளாக நிதிநிலை அறிக்கை உள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

விடியலை நோக்கி:

‘விடியலை நோக்கி’ என்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி, ‘எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்’, ‘மாதம் ஒரு முறை மின் கட்டணம்’, ‘முதியோர் உதவித் தொகை 1,500 ரூபாயாக அதிகரிப்பு’, ‘கல்விக் கடன் ரத்து’, ‘நகைக் கடன் ரத்து’, ‘மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய்’, ’60 வயதிற்கு மேற்பட்டோரின் உதவித் தொகை 1500 ரூபாய்’ உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி, அதன்மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு.க.அரசின் முதல் நிதி நிலை அறிக்கை ‘விரக்தியை நோக்கி’ மக்களை அழைத்துச் சென்றிருக்கிறது.

தி.மு.க. வஞ்சித்துள்ளது:

இன்று மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021-2022 ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையையும், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வாக்களித்த மக்களை தி.மு.க. வஞ்சித்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாகிறது. இது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் நிதி நிலைமையை முன்கூட்டியே நன்கு அறிந்திருந்தும், ஆட்சிக் கட்டிலில் அமரவேண்டும் என்பதற்காக பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் அளித்ததும் இந்த அறிக்கை மூலம் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ஒதுக்கீடு குறைப்பு:

2021-2022 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையுடன் ஒப்பிடும்போது, 2021-2022 ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, நீதித் துறை நிருவாகம், நெடுஞ்சாலைகள் துறை, உயர் கல்வித் துறை, மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறை, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மதிய உணவு திட்டம் மற்றும் குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகியவற்றிற்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளுக்கு பொருட்கள் இல்லாத சூழ்நிலை:

2021-2022 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையில், உணவு மானியத்திற்கான ஒதுக்கீடு 9,604.27 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், திருத்திய நிதிநிலை அறிக்கையில், 8,437.57 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 2021 மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 5.24 இலட்சம் பேர், அதற்கு முன்பாக 1.72 இலட்சம் பேர், ஆக மொத்தம் 7.17 இலட்சம் பேர் புது குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்ததில், 4.52 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ள நிலையில், 1,166.70 கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது, சில பயனாளிகளுக்கு பொருட்கள் இல்லாத சூழ்நிலையை உருவாக்கிடுமோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.

மீண்டும் உளுத்தம் பருப்பு:

சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், மானிய விலையில் பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் வழங்குவது தொடரும் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்ற அதே நேரத்தில், ‘ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை’, ‘மீண்டும் உளுத்தம் பருப்பு’ போன்ற வாக்குறுதிகள் பற்றி எதுவும் குறிப்பிடாதது ஏழை எளிய மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதேபோன்று பள்ளிக் கல்வித் துறையை எடுத்துக் கொண்டால், 2021-2022 ஆம் ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கையில், 34,181.73

சரியான நடவடிக்கை அல்ல:

கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், திருத்திய நிதி நிலை அறிக்கையில் 32,599.54 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 1,582.19 கோடி ரூபாய் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கூடுதலாக இருக்கிறது என்ற தகவல் வருகின்ற இந்தத் தருணத்தில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு இருப்பது சரியான நடவடிக்கை அல்ல என்று மக்கள் கருதுகிறார்கள்.

‘பழையஓய்வூதியத் திட்டம்’:

‘பழையஓய்வூதியத் திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அறிவித்து அதன்மூலம் அவர்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டு, இன்று இயல்பாக அவர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை கூட அடுத்த ஆண்டிற்குத் தள்ளி வைத்திருப்பது அவர்களை பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

பெட்ரோலுக்கான விலை:

‘பெட்ரோலுக்கான விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும்’ என்றும், ‘டீசலுக்கான விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும்’ என்றும் தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, நிதிநிலை அறிக்கையில் பெட்ரோலுக்கு மட்டும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு இருக்கிறது. தி.மு.க. அரசு 7-5-2021 அன்று ஆட்சிப் பொறுப்பையேற்றபோது, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 17 காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 86 ரூபாய் 65 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

விலை உயர்வுக்கு வழிவகுக்கும்:

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்களுக்கு மேலாகியுள்ள சூழ்நிலையில், 13-8-2021 அன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 102 ரூபாய் 49 காசுக்கும்,டீசல் விலை லிட்டருக்கு செய்யப்படுகிறது. 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை அதாவது, தி.மு.க. அரசு அமைந்த பிறகு, பெட்ரோல் விலை 9 ரூபாய் 32 காசாகவும், டீசல் விலை 8 ரூபாய் 25 காசாகவும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பெட்ரோலுக்கு மட்டும் 3 ரூபாய் வரி குறைப்பு என்பதும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் டீசலுக்கான விலை குறைப்பு பற்றி ஏதும் குறிப்பிடப்படாதது என்பதும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, கடன் என ஒவ்வொன்றையும் விரிவாக பட்டியலிட்டு அதனை பிறமாநிலங்களுடனும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியுடனும் ஒப்பிட்டு மாண்புமிகு நிதி அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட்டதையும், இன்றைய திருத்திய நிதிநிலை அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், மாற்றத்திற்கானஅறிகுறிகள் ஏதும் தெரியவில்லை. கனிமங்கள் மற்றும் சுரங்கங்களில் ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதைத் தவிர புதிதாக வருவாய் வருவதற்கான வழிமுறைகள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை.

நிதிப் பற்றாக்குறை, கடன், செலவு அதிகரிப்பு:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்த திருத்திய நிதிநிலை அறிக்கையில் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, கடன், செலவு ஆகியவை அதிகரிக்கப்பட்டு வருவாய் குறைந்து இருக்கிறது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு இந்த நிதிநிலை அறிக்கை அமையவில்லை.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சாதனைகளே இல்லாத சோதனைகள் நிறைந்த வேதனையான நிதிநிலை அறிக்கை.”,என்று தெரிவித்துள்ளார்.