என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு.. பிரதமர் வருகை.! அண்ணாமலை முக்கிய தகவல்.!

பிரதர் மோடியின் கடந்த 9 ஆண்டுகள் ஆட்சி சாதனைகளை தமிழ்நாடு முழுக்க எடுத்து சொல்லும் விதமாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” எனும் பெயரில் நடை பயணத்தை கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி தொடங்கினார். இந்த பயணம் ராமேஸ்வரத்தில் இருந்து துவங்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடியின் தமிழக பயணம்… திருச்சி, மதுரை, ராமேஸ்வரம்.!

நகரப் பகுதியில் நடை பயணமாக 1700 கிலோ மீட்டர் தூரமும், வாகன மார்க்கமாக 900 கிமீ தூரமும் என மொத்தம் ஐந்து கட்டங்களாக 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் இந்த நடை பயணமாக வடிவமைக்கப்பட்டது. பல்வேறு சூழ்நிலைகளை கடந்து அண்ணாமலை யாத்திரையை செயல்படுத்தி வந்தார்.

பல்வேறு கட்டங்களை கடந்து ஜனவரி 20ஆம் தேதியான இன்று நடை பயணம் நிறைவு பெறுவதாக இருந்தது. ஆனால் இடையில் பல்வேறு காரணங்களுக்காக என் மண் என் மக்கள் யாத்திரை பயணம் தடைப்பட்டதால் தற்போது பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த நடை பயணத்தை முடிக்க தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் யாத்திரை இறுதி நிகழ்வுக்காக பிரதமர் மோடியிடம் தேதி கேட்டுள்ளோம். அவர் கலந்து கொள்ளும் தேதி உறுதியான பின்னர் என் மனம் என் மக்கள் யாத்திரை இறுதி நிகழ்வு தேதி அறிவிக்கப்படும். இன்னும் ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும். பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் சென்னையில் இந்த நிகழ்வு நடைபெறும். அதற்கான வேலைகளும் மும்முறமாக நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து, வரும் ஜனவரி 25ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இருக்கும் முதல் தலைமுறை வாக்காளர்களை காணொளி வாயிலாக பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார் என்றும் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறினார்.